Monday, May 21, 2012

கருவூரார் வேம்பு கற்பம்



தானவனாம் வேம்பினோட கற்பம்தன்னை
தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளும்
ஆனதொரு கார்த்திகையாம் மாதம்தன்னில்
வால்மிருக சிரீஷமும் பூசம்தன்னில்

ஏனமுதற் ஜலமிக்கக் கொழுந்தைக்கிள்ளி
இன்பமுடன் தின்றுவா இருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
அதுபட்டு போகுமப்பா அறிந்துகொள்ளேன்

கொள்ளப்ப மாதமொன்று கொண்டேயாகில்
குஷ்டமென்ற பதினெட்டு வகையுந்தீரும்
துள்ளுகின்ற பூதமொடு பிசாசுதானும்
துடிதுடித்து கண்டவுடன் ஓடிபோகும்


விள்ளுகின்றேன் பொடிசெய்து கொளுந்துதன்னை
வெருகடியாய்தேனில் அரைவருடம் கொண்டால்
வள்ளலே நரையொடு திரையுமாறும்
வாலிபம்முன்னூறு வயதிருப்பான் கானேன்

இருப்பதொரு வேம்பினை துளைத்துதானே
இன்பமுடன் மேல்நோக்கி சிலாகைத்தாக்கி
திருப்பாணி மாகுமப்பா மற்றொண்றாக
திதங்கீழ் மற்றதோர் பாண்டம்வைத்து

மறுப்பிலா துபாயமதனை மூடி
மண்டலம்தான் சென்றபின்பு தைலம்தானும்
விருப்பமுடன் தைலமங்கே இறங்கினிற்கும்
மீண்டும்நீ தைலமதை எடுத்துக்கொள்ளேன்

எடுத்துவந்த தைலமப்பா கலஞ்சிமூன்று
இந்தயிடை தேன்கூட்டி குழப்பிக்கொண்டு
திடமாக மண்டலமே கொண்டேயானால்
திரையுமில்லை நரையுமில்லை செப்பக்கேளு

அடவாக அதிசயங்கள் அநேகம்கானும்
ஆறுஆதாரங்கள் எல்லாம் வெளியாய்கானும்
இடமாக காரியங்கள் ஜெயம்கொள்வாய்நீ
இன்ப மனோகரனாய் இருப்பாயென்னே

என்னேகேள் வண்ணந் தானேயாவாய்
இயல்பாக அரைவருடம் கொண்டேயானால்
உன்னிலே பதினாறு வயதுபோல
உறுதியாய் வைரசடம் உமிழ்நீர்வேதை

மன்னனே யாகாச கெளனசித்தி
வல்லமையால் பூவுலகில் வசிக்கலாகும்
சொன்னபடி ஒருவருடம் கொண்டேயாகில்
தொலையாத காயசித்தி வேம்பிங்கற்பம்

No comments:

Post a Comment